செய்திகள்
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - களம் இறக்கினார் பிரேசில் அதிபர்

Published On 2019-08-24 19:00 GMT   |   Update On 2019-08-24 19:00 GMT
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரேசிலியா:

பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.



எனவே அமேசான் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி நேற்று முன்தினம் அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசான் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு ராணுவ வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News