செய்திகள்
ஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் - பயங்கரவாதிகள் உள்பட 8 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் போலீசார் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளிடையே நடந்த பயங்கர மோதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்அர்ஹர் மாகாணத்தின் ஹோக்யானி மாவட்டத்துக்கு உள்பட்ட ஹாஸ்னி அபேட் என்ற பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. அந்த சோதனைச்சாவடியில் நேற்றிரவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து வெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். சுதாரித்துக் கொண்ட போலீசார், தலிபான் பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினர் இடையே நடந்த சண்டையில் போலீசார் 3 பேரும், தலிபான் பயங்கரவாதிகள் 5 பேரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 போலீசார் மற்றும் 8 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்துள்ளதாக நங்அர்ஹர் மாகாண செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.