செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் - டிரம்ப் குற்றச்சாட்டு

Published On 2019-08-07 22:40 GMT   |   Update On 2019-08-07 22:40 GMT
ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த கூகுள் நிறுவனம் தாங்கள் ஒருபோதும் அரசியல் சார்போடு செயல்பட்டது கிடையாது என விளக்கம் அளித்தது.

ஆனாலும் டிரம்ப், அடிக்கடி கூகுள் நிறுவனத்தை சாடி வந்ததோடு, அந்நிறுவனம் சீன ராணுவத்துக்கு உதவிகள் செய்வதாகவும் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் டிரம்பை சந்தித்தார்.

இந்த சந்திப்பு மிகச்சிறப்பாக அமைந்ததாகவும், கூகுள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வந்திருப்பதாகவும் டிரம்ப், அப்போது டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ என்ற என்ஜினீயர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதாலேயே நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டு இருக்கிறது” என கூறினார்.

கெவின் கெர்னெகீயின் இந்த பேட்டி ஜனாதிபதி டிரம்பின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் அந்த பேட்டியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அனைத்தும் மிகவும் சட்டவிரோதமானது. நாங்கள் கூகுளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.

மேலும் அவர் இது தொடர்பாக டுவிட்டரில் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகைக்கு வந்த சுந்தர் பிச்சை, என்னை மிகவும் பிடிக்கும் என்று கூறியதோடு, எனது நிர்வாகத்தை புகழ்ந்து பேசினார். அமெரிக்க ராணுவத்துக்கே கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்துக்கு உதவுவதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன் 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு அவர்கள் உதவவில்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை சட்டவிரோதமாக முறியடிக்க திட்டமிடவில்லை என்றும் என்னிடம் உறுதியளித்தார். கெவின் கெர்னெகீயை சந்திக்கும் வரையில் அதுதான் உண்மை என்று நினைத்திருந்தேன்.

அவர் கூறிதான் கடந்த தேர்தலில் ஹிலாரி குறித்த எதிர்மறையான தகவல்களை பின் தள்ளிவிட்டு, என்னை பற்றிய எதிர்மறையான தகவல்களை கூகுள் முன்னிலைப்படுத்தியது தெரியவந்தது.

இதேபோல் 2020 தேர்தலிலும் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருக்கிறது. இது சட்டப்படி குற்றம் என்பதால் கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்கள் நிறுவனம் ஒற்றைச் சார்புடனோ, அரசியல் சார்புடனோ செயல்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அதில், “அதிருப்தி ஊழியர் கூறிய அனைத்து தகவல்களும் பொய்யானவை. இவை அனைத்தும் பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கில் கூறப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும்” எனவும் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News