செய்திகள்
கப்பல் தீப்பிடித்து எரிந்த காட்சி.

இந்தோனேஷியாவில் கப்பலில் தீ பிடித்து 3 பேர் உடல் கருகி பலி

Published On 2019-07-31 14:18 GMT   |   Update On 2019-07-31 14:18 GMT
இந்தோனேஷியாவில் பழுது பார்ப்பதற்காக வந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜகர்தா:
 
இந்தோனேஷியா நாட்டில் உள்ள கெப்லவுன் ரியாவ் மாகாணத்தில் ஹரிமுன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கப்பல் பழுது பார்க்கும் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்ப்பு வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொழிலாளர்கள் சிலர் இன்று பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவியது. இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கப்பலில் சிக்கிய நபர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி பரிதாமபாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கப்பலில் பழுது நீக்கும் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்த முழு விவரம் தெரியாததால் மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News