செய்திகள்
பாகிஸ்தானில் கனமழைக்கு 34 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
கராச்சி:
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, மின்சாரம் தாக்குதல் மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. மேலும், கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கனமழையால் நாட்டின் பல்வேறு நகரங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, மின்சாரம் தாக்குதல் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துகளில் சிக்கி இன்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், மேலும் 2 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.