செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 37 போலீசார் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 37 பேலீசார் உயிரிழந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தாலீபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவர்களை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்புபடையினர், போலீசார் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தஹேர் மாகாணத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடி ஒன்றில் இன்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 37 போலீசார் பலியாகினர்.
இந்த தாக்குதல் தொடர்பாக எந்த பயங்கரவாத அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இன்று ஒரே நாளில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.