செய்திகள்
நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி
நேபாள நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பரிதாபமாக உயிரிழந்தனர்.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இதில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . நிலச்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயினர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர்.
நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 35 பேர் காணவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.