செய்திகள்
மேடையிலேயே மயங்கி விழுந்து, இறந்த இந்திய நகைச்சுவை கலைஞர்

துபாயில் நடந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்து, இறந்த இந்திய நகைச்சுவை கலைஞர்

Published On 2019-07-21 22:09 GMT   |   Update On 2019-07-21 22:09 GMT
துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு மேடையிலேயே மயங்கி விழுந்து, இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தம்பதியினருக்கு பிறந்து, துபாயில் சிறந்த நகைச்சுவை கலைஞராக திகழ்ந்து வந்தவர் மஞ்சுநாத் நாயுடு (வயது 36).

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த நகைச்சுவை கலைஞர்களுக்கான நிகழ்ச்சியில் மஞ்சுநாத் நாயுடு பங்கேற்றார். மறைந்த தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றிய கதைகளை நகைச்சுவையாக கூறி அனைவரையும் சிரிக்கவைத்தார்.

அதனை தொடர்ந்து அதிக பதற்றம் காரணமாக தான் எப்படி பாதிப்புக்கு உள்ளானேன் என்பதை பற்றி உணர்வுபூர்வமாக கூறிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நிலைகுலைந்து, மேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். அடுத்த நொடியே மயங்கி சரிந்தார்.

இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும், இதுவும் நகைச்சுவையின் ஒரு பகுதி என நினைத்து சிரித்து கொண்டிருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் மஞ்சுநாத் நாயுடு எழுந்திருக்காததால் அவரது நண்பர் ஒருவர் ஓடி சென்று அவரை எழுப்பியபோது, அவர் உயிர் இழந்தது தெரியவந்தது.

மேடையில் பதற்றம் குறித்து பேசிவந்த மஞ்சுநாத் நாயுடு, உண்மையாகவே அதிக பதற்றம் அடைந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News