செய்திகள்
ஸ்டேனா இம்பெரோ கப்பல்

ஈரான் சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு - மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்

Published On 2019-07-20 12:11 GMT   |   Update On 2019-07-20 12:11 GMT
ஈரான் அரசு சிறை பிடித்த பிரிட்டன் நாட்டு கப்பலில் சிக்கி தவிக்கும் 18 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

டெஹ்ரான்:

அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் பிரிட்டன் நாட்டு கடற்படை பறிமுதல் செய்தது. சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த பிரிட்டன் எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. 



சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் 23 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள் என தெரிவிந்துள்ள நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு தவித்துவரும் 18 இந்தியர்களையும் மீட்கும் பணிகளை இந்திய அரசு முடுக்கி விட்டுள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ’ஸ்டேனா இம்பெரோ’ கப்பல் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தது. பிரிட்டனில் உள்ள எண்ணைய் நிறுவனத்துக்காக சரக்கு ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News