செய்திகள்
சோலி ஹைன்ஸ்

விமானத்தில் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண் -ரூ.72 லட்சம் அபராதம் விதிப்பு

Published On 2019-07-18 04:17 GMT   |   Update On 2019-07-18 04:17 GMT
விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென பயணிகளை மிரட்டிய பெண்ணுக்கு அந்நிறுவனம், ரூ.72 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
லண்டன்:

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், பெர்க்ஸ் கவுண்டியின் மைதன்ஹெட் பகுதியைச் சேர்ந்தவர் சோலி ஹைன்ஸ்(25). இவர் சமீபத்தில் லண்டனின் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் இருந்து துருக்கி செல்லும் ஜெட்-2 நிறுவன விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த சோலி ஹைன்ஸ், விமானிகள் இருக்கும் காக்பிட் அறையின் கதவினை அத்துமீறி திறக்க முற்பட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் சோலியை தடுக்கவே ஆவேசமாக கத்த தொடங்கினார்.

சோலி கத்தும்போது, ‘இங்கிருக்கும் அனைவரையும் கொன்றுவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் விமானம் ஹைஜாக் செய்யப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. பயணிகளும் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்ந்தனர்.

இதையடுத்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல்தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பின்னர், அதிநவீன போர் விமானங்கள் உதவியுடன்,  அந்த விமானம் மீண்டும் லண்டனுக்கு திருப்பப்பட்டது.



அதிநவீன போர் விமானங்கள் விமானத்தை இடைமறிக்க சென்றபோது, பல மைல்களுக்கு சத்தம் கேட்டது. ஒருவழியாக ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் சோலி கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்தபோதும் விடாமல் கூச்சல் போட்டப்படியே இருந்துள்ளார். இதனால் சோலியை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெட்2 விமான நிறுவன அதிகாரி கூறுகையில், ‘இது பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்று இனி யாரும்  நடந்துக் கொள்ளக் கூடாது. அதற்காக அவருக்கு 85,000 பவுண்ட்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சோலி, அந்த அபராதத்தை கட்டவில்லை என்றால், நாங்கள் முறையாக சிவில் கோர்ட்டுக்கு இந்த விவகாரத்தை கொண்டு  சென்று அபராதத்தை பெறுவோம்’ என கூறியுள்ளார்.





Tags:    

Similar News