செய்திகள்
பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கான்டிரியன் நகரில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர்ட் மேரெஸ்பை:
அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ மாகாணத்துக்குட்பட்ட கான்ட்ரியன் நகர் அருகில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கான்ட்ரியன் நகரில் இருந்து வடக்கில் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்நாட்டு நேரப்படி மாலை 6.12 மணியளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் சுமார் 3 மணி) பூமிக்கு அடியில் சுமார் 59 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.