செய்திகள்
அப்பாஸ் மவுசவி

ரஷியாவின் முயற்சியில் அமெரிக்காவுடன் சமாதானமா? - ஈரான் அரசு விளக்கம்

Published On 2019-07-14 14:56 GMT   |   Update On 2019-07-14 14:56 GMT
ரஷியாவின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுடன் சமாதானமாக போக ஈரான் அரசு முன்வந்துள்ளதாக வெளியாகும் தகவலுக்கு ஈரான் அரசின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
டெஹ்ரான்:

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன. 

அந்த தடையை நீக்க வேண்டுமானால் சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை ஈரான் பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை அத்துமீறும் வகையில் ஈரான் அரசு 300 கிலோவுக்கும் அதிகமாக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக ஐ,நா.முகமை தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் மீது மேலும் பல்வேறு வகையான தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில், ரஷியாவின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுடன் சமாதானமாக போக ஈரான் அரசு முன்வந்துள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்தன. இப்படி வெளியாகும் தகவலுக்கு ஈரான் அரசின் வெளியுறவுத்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளுடன் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தும் எவ்வித நடவடிக்கையிலும் ஈரான் அரசு ஈடுபடவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசவி திட்டவட்டமாக இன்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து ஒருபோதும் நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக மாட்டோம் என ஈரான் நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களும் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News