செய்திகள்
கிழக்கு இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் இன்று 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.
ஜகர்தா:
புவியியல் அமைப்பின்படி பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் இந்தோனேசியா நாட்டில் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அவ்வகையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் (உள்நாட்டு நேரப்படி) இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.
மாலுக்கு மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள டெர்னேட்டே என்ற நகருக்கு தென்மேற்கில் சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.3 அலகுகளாக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மிக வேகமாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.