செய்திகள்
S-400 ஏவுகணை

துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு

Published On 2019-07-14 09:21 GMT   |   Update On 2019-07-14 09:21 GMT
ரஷியாவிடம் இருந்து S-400 ஏவுகணை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ததால் துருக்கி நாட்டின்மீது அடுத்த வாரத்துக்குள் பொருளதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
வாஷிங்டன்:

துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் F-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். துருக்கி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31-ம் தேதிவரை கெடு விதித்திருந்தார்.

F-35 ரக போர் விமானம் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்கா வந்துள்ள துருக்கி நாட்டு விமானிகளை அதற்கு மேல்  எங்கள் நாட்டில் தங்கவிட மாட்டோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின்மீது விதிக்கப்படும் பொருளாதார தடை துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு குறிப்பிட்டிருந்தது.



ரஷியாவிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களில் முதல் கவனை நேற்று முன்தினம் துருக்கி பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், துருக்கி நாட்டின்மீது அடுத்த வாரத்துக்குள் பொருளதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News