செய்திகள்

சட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்

Published On 2019-06-25 10:23 GMT   |   Update On 2019-06-25 11:53 GMT
மெகுல் சோக்சி சட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் நாடு கடத்தப்படுவார் என ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
செயின்ட் ஜான்ஸ்:-

பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் முன்னர் தகவல் அனுப்பினார்.

இதைதொடர்ந்து, மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரண்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்தது. 

இதனிடையே, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் உடல்நிலை சீரடைந்த பின்னர் இந்தியாவுக்கு திரும்பி வருவேன் எனவும் மெகுல் சோக்சி தெரிவித்திருந்தார். 

இதற்கு, உரிய மருத்துவர்கள் குழுவுடன் ஆன்டிகுவா நாட்டுக்கு விமான ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பி வைத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர நாங்கள் தயாராக இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில்,  சட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார் என்று ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது:- மெகுல் சோக்சி குடியுரிமை பெற்றிருந்தாலும், அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படுவது உறுதி. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிதி சார்ந்த குற்றங்களில் தொடர்புடைய கிரிமினல்களுக்கு தஞ்சம் அளிக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை.

அதேசமயம், கிரிமினல்களுக்கும் அடிப்படை உரிமைகள் இருப்பதால், சோக்சி நீதிமன்றம் சென்றிருக்கிறார். சட்டம் அதனுடைய வழியில் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். 

மெகுல் சோக்சி தனக்கிருக்கும் சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திய பிறகு, அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News