செய்திகள்
எத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்
எத்தியோப்பியாவில் அம்ஹாரா மாகாண அரசை கலைக்க முயற்சித்த கும்பலின் தலைவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அடிஸ் அபாபா:
எத்தியோப்பியா நாட்டில் பிரதமர் அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல், அம்ஹாரா மாகாண அரசை கலைக்கும் முயற்சியாக அந்த மாகாண கவர்னரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு முன்னாள் ராணுவ தளபதி தான் காரணம் என ஆளும்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்க முயன்ற கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் பிரிகேடியர் ஜெனரல் அசாமிநியூ டிசிகேவை போலீசார் சுட்டுக்கொன்றதாக அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அம்ஹாரா புறநகர்ப்பகுதியான பாகிர் தார் பகுதியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளபதி மற்றும் அம்ஹாரா மாகாண கவர்னரின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகின்றன. மேலும், பாகிர் தார் மற்றும் அடிஸ் அபாபா நகரங்களில் அரசு ஆதரவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் தீய சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.