செய்திகள்

எங்கள் விவேகத்தை பலவீனமாக மதிப்பிட வேண்டாம் - ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Published On 2019-06-23 09:41 GMT   |   Update On 2019-06-23 12:31 GMT
தாக்குதலை தள்ளிப் போட்டதால் எங்கள் விவேகத்தை தவறுதலாக பலவீனம் என்று மதிப்பிட வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெருசலேம்:

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.  

ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது.  சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.  இதற்கிடையே ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது.  அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியதாக குற்றம்சாட்டியது.



இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது டுவிட்டரில் “ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது” என பதிவிட்டிருந்தார்.

மேலும், ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டு அதனை கடைசி நிமிடத்தில் கைவிட்டதாக வெளிவந்த செய்தி இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் நாட்டின் ராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸல் ஷேகர்ச்சி நேற்று எச்சரித்தார்.

இதற்கிடையில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலை தள்ளிப் போட்டதால் எங்கள் விவேகத்தை தவறுதலாக பலவீனமாக மதிப்பிட வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட்டன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திப்பதற்காக ஜெருசலேம் நகருக்கு வந்துள்ள ஜான் பால்ட்டன் 'மறுகட்டமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ள எங்கள் ராணுவம் எப்போதும் தாக்குதலுக்கு தயாராகவே உள்ளது’ எனவும் ஈரானை எச்சரித்துள்ளார்.  
Tags:    

Similar News