செய்திகள்
ஏமனில் அரசுப் படைகள் அதிரடி தாக்குதல்- ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 17 பேர் உயிரிழப்பு
ஏமனில் அரசுப் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில், ஹவுத்தி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஏடன்:
ஏமனில் கடந்த 2014ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த சண்டையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். உயிருக்குப் பயந்து, பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையே ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக சண்டையிட்டு வரும் அரசுப் படைகளுக்கு ஆதரவாக, சவுதி கூட்டுப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தாயிஸ் மாகாணத்தில் நேற்று அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மாகாணத்தின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையில் உள்ள கிளர்ச்சிப் படைகளின் நிலைகள் மீது அரசுப் படைகள் குண்டுகள் வீசி தாக்கின. இதில், கிளர்ச்சி படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.