செய்திகள்
சவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்
சவுதி அரேபியா நாட்டின் அப்ஹா விமான நிலையம் மீது இன்று தாக்குதல் நடத்தியதாக ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
சனா:
சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் அப்ஹா என்ற நகரில் சவுதி அரசுக்கு சொந்தமான விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டால் கடந்த ஒருவார காலத்தில் அப்ஹா விமான நிலையம் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதலாக இது அமையும். கடந்த புதன்கிழமை ஹவுத்தி போராளிகள் இங்கு நடத்திய தாக்குதலில் 26 பேர் காயமடைந்தனர்.
இதற்கு பழிதீர்க்கும் வகையில் எல்லைப்பகுதியில் உள்ள ஹவுத்தி போராளிகளின் முகாம்களின் மீது சவுதி விமானப்படைகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தியது நினைவிருக்கலாம்.