செய்திகள்

நிரவ்மோடி பிரிட்டனில் தங்குவதற்கு 5 ஆண்டு விசா

Published On 2019-03-15 09:26 GMT   |   Update On 2019-03-15 09:26 GMT
நிரவ்மோடி ரூ.16 கோடியில் தொழில் முதலீடு செய்து பிரிட்டனில் தங்குவதற்கு கோல்டன் விசாவை பெற்றுள்ளார். #NiravModi #GoldenVisa
லண்டன்:

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி, அவரது உறவனர் மெகுல்கோக்சி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.

அவர்களை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச போலீசின் உதவியும் நாடப்பட்டது. அதற்கான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியாமல் இருந்தது. இதில் நிரவ்மோடி அமெரிக்காவில் நியூயார்க்கில் இருந்ததாகவும், பின்னர் ஹாங்ஹாங்கில் இருந்ததாகவும் அவரை பற்றி தகவல்கள் வெளிவந்தன. ஆனாலும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் நிரவ்மோடி லண்டனில் வீடு எடுத்து தங்கி இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் 33 மாடி குடியிருப்பில் 3 படுக்கை கொண்ட வீட்டை வாங்கி தங்கி இருப்பது தெரியவந்தது.

அங்கு தனது வைர வியாபார தொழில் அலுவலகம் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை பிரிட்டன் பத்திரிகை ஒன்று படத்துடன் வெளியிட்டது.

இதற்கு முன்பு நிரவ்மோடி மீசை இல்லாமல் இருந்து வந்தார். தற்போது தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக மீசை வளர்த்திருந்தார். அவர் நாய் ஒன்றுடன் அந்த பகுதியில் வாக்கிங் செல்வதை படம் பிடித்து அந்த பத்திரிகை செய்து வெளியிட்டு இருந்தது.

அவர் லண்டனுக்கு எப்படி வந்தார். லண்டனில் தங்குவதற்கு எப்படி அனுமதி கிடைத்தது என்பது போன்ற விவரங்கள் இப்போது கிடைத்துள்ளது.

லண்டனில் தொழில் செய்வதற்கும், படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் சிறப்பு விசா வழங்கப்படுகிறது. இதில் தொழில் செய்வதற்கான விசாவை நிரவ்மோடி பெற்றுள்ளார்.

அதாவது ஒரு நபர் ரூ.16 கோடி அளவிற்கு பிரிட்டனில் தொழில் முதலீடு செய்வதாக இருந்தால் அவருக்கு கோல்டன் விசா என்ற தங்கும் அனுமதி விசா வழங்கப்படும். அதன்படி ரூ.16 கோடியில் முதலீடு செய்து நிரவ்மோடி இந்த விசாவை பெற்றுள்ளார்.

கைக்கடிகாரம் மற்றும் நகைகள் விற்பனை செய்வதாக கூறி இந்த முதலீடை செய்திருக்கிறார். அதற்கான வர்த்தக கடையை தொடங்குவதற்கு கல்லூரி சாலை, ஸ்காட்டிஸ் பிராவிடன்ட் கல்ஸ் என்ற இடத்தில் கடை முகவரியையும் வழங்கி உள்ளார். அங்கு கடந்த ஆண்டு மே மாதம் கடை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விசா எப்போது பெறப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடுவதற்கு முன்பே இந்த விசாவை பெற்றிருக்கிறார். இதன்படி அவர் 5 ஆண்டுகள் லண்டனில் தங்கி இருக்க முடியும். முதலீட்டை மேலும் அதிகரித்தால் அவர் நிரந்தரமாக தங்குவதற்கு விசா வழங்கப்படும்.

நிரவ்மோடியின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் நவம்பர் மாதம் தான் இந்தியா முறைப்படி சர்வதேச போலீசுக்கு தகவல் அனுப்பி ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.

எனவே அதுவரை இந்திய பாஸ்போர்ட்டிலேயே பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பெல்ஜியம் நாட்டில் தங்குவதற்கு அடைக்கலம் கேட்டு விண்ணப்பமும் வழங்கி இருக்கிறார்.

பிரிட்டனில் பெற்ற கோல்டன் விசா அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்படுவதற்கு முன்பே பெற்றதாகும். எனவே அவர் 5 ஆண்டு லண்டனில் தங்குவதற்கு எந்த சிக்கலும் ஏற்படாது. அதே நேரத்தில் அவர் லண்டனில் இருந்து வேறு நாடுகளுக்கு சட்ட ரீதியாக பயணம் செய்ய முடியாது.

ஆனாலும் பிரிட்டன் சட்டத்தின்படி இந்தியா அணுகி அவரை இந்தியா கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NiravModi #GoldenVisa

Tags:    

Similar News