மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன.
அதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 27-ந்தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து கடந்த சில மாதங்களாக மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டது.
அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.
இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிக்கல் இன்றி நடத்துவதற்காக உரிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகளை எப்படி கையாள்வது என்று தேர்தல் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்று வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன் பேரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. சில கட்சிகள் ஓட்டுப்பதிவு நேரம் தொடர்பாக கருத்து தெரிவித்தன.
சில கட்சிகள் வாக்காளர்களுக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக கருத்துகளை வெளியிட்டன. கொரோனா காலம் என்பதால் அதற்கேற்ப தேர்தல் ஆணைய அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டதன் அடிப்படையில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம், மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது.
இந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறை ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும்.