அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தற்காலிகமாக உதவி பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து- ஐகோர்ட்
பதிவு: நவம்பர் 10, 2020 07:28
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை:
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்கள் 2008-09-ம் கல்வியாண்டில் திருச்சி, மதுரை,
கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் 899 உதவி
பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2011-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகங்களை ஒன்றாக இணைக்க
கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. தற்காலிக அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட சிலருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.
சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 2019-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம்
அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து தற்காலிக உதவி பேராசிரியர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ஒப்பந்த
ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் புதியவர்களை நியமிக்கவும் தடைவிதிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு
பணி வரன்முறை செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், “அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின்படி, 25 ஆயிரத்து 680
இளங்கலை மாணவர்களுக்கு 1,284 பேராசிரியர்களும், 1,806 முதுகலை மாணவர்களுக்கு 120 பேராசிரியர்களும் தேவைப்படுகின்றனர். தற்காலிக
அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிட்டு, மீண்டும் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அவசியம் இல்லை.
எனவே, தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிப்பது தொடர்பாக 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்கிறேன்.
தகுதி, அனுபவம் உள்ள மனுதாரர்களை, காலிப்பணியிடங்கள் ஏற்படும்போது, அண்ணா பல்கலைக்கழகம் பணி நிரந்தரம் செய்யலாம். பணியில்
இருக்கும் மனுதாரர்களுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.