கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு செல்ல அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ நவ்ஜாத் சித்து கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் செல்ல அனுமதி கேட்டு மத்திய மந்திரி, பஞ்சாப் முதல்வருக்கு சித்து கடிதம்
பதிவு: நவம்பர் 02, 2019 17:58
நவ்ஜாத் சிங் சித்து
சண்டிகார்:
சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வருவதற்கான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இந்தியா -பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகின.
அதன்படி பஞ்சாப்பில் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே (சர்வதேச எல்லையில் இருந்து) 4 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி, வரும் 9-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார். இவ்விழாவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன நவ்ஜாத் சிங் சித்துவிற்கு பாகிஸ்தான் பிரதமர் அலுவலத்தின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு சித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் பஞ்சாப் மாநில முதல்வரான அமரிந்தர் சிங்கிற்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
‘கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு பாகிஸ்தான் சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன். ஒரு தாழ்மையான சீக்கியராக வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குருநானக் பாபாவிற்கு வணக்கம் செலுத்துவது மிகப்பெரிய கவுரவம் ஆகும்.
எனவே, இந்நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அமரிந்தர் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.