ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை நவம்பர் 13 வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்தது.
பின்னர் மேலும் 7 நாள் விசாரணை காவல் நீட்டிக்கப்பட்டு ப.சிதம்பரத்தை அக்டோபர் 30-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதே வழக்கில் சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மேலும் ஒருவாரம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு சிதம்பரத்தின் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு நாளைக்காவது காவலை நீட்டிக்ககோரிய அமலாக்கத்துறை வக்கீலின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ப.சிதம்பரத்தை நவம்பர் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.