ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று டெல்லியில் நடத்திய 12 மணிநேர உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus
உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு
பதிவு: பிப்ரவரி 11, 2019 21:07
புதுடெல்லி:
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரெயென், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 12 மணி நேரமாக கடைபிடித்து வந்த தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus