தமிழ்நாடு செய்திகள்

வாட்ஸ்-அப் தொடர்புகளால் நீளும் விசாரணை: நடிகர் கிருஷ்ணா கைதாவாரா?

Published On 2025-06-26 13:04 IST   |   Update On 2025-06-26 13:04:00 IST
  • நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்கள் சிலரிடம் CODE WORD-ல் பேசி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு ஏதேனும் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்கள் சிலரிடம் CODE WORD-ல் பேசி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா தனது நண்பர்களோடு வாட்ஸ்-அப் சாட்டிங் மூலமாக பல்வேறு தகவல்களை பரிமாறி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் நான் பெற்றுக் கொண்டேன்... எடுத்துக் கொண்டேன் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. இதனை மையமாக வைத்தே கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்மூலம் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு ஏதேனும் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று மதியம் 2 மணியில் இருந்து இன்று மதியம் வரையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நீண்டு கொண்டு செல்வதால் அவர் கைது செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஸ்ரீகாந்துடனான தொடர்பு குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதற்கு பதில் அளித்த நடிகர் கிருஷ்ணா, "ஸ்ரீகாந்த் எனக்கு நல்ல நண்பர். மற்ற படி அவருடன் எனக்கு தவறான தொடர்புகள் எதுவும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

கிருஷ்ணாவுடன் விசாரணை நீண்டு கொண்டு செல்வதால் அவர் கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி போலீசாரிடம் கேட்டபோது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அடுத்து என்ன நடைபெறும் என்று இப்போதே தெரிவிக்க முடியாது என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News