நன்னிலம் அருகே குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
- பிரபாகரனின் மகள் ருத்ரவீணா வீட்டின் பின்புறத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
- குழந்தையை காணாததை கண்டு பெற்றோர் வந்து பார்த்தபோது குட்டையில் குழந்தை விழுந்தது தெரியவந்தது.
நன்னிலம்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் துக்காச்சி புதுகாலனி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35) விவசாயி.
இவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளான ருத்ரவீணா ஆகியோருடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள அதம்பாவூர் ஒத்தவீடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உறவினர் மோகன் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து, அதே பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது பிரபாகரனின் மகள் ருத்ரவீணா வீட்டின் பின்புறத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்குள்ள மீன்வளர்ப்பு குட்டையில் திடீரென ருத்ரவீணா தவறி விழுந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினாள்.
இதற்கிடையே குழந்தையை காணாதது கண்டு பெற்றோர் வந்து பார்த்தபோது குட்டையில் குழந்தை விழுந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குழந்தையை, மீட்டு தூக்கிக்கொண்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ருத்ரவீணா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.