ஆர்.எஸ்.எஸ். பேரணி மூலம் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முயற்சி செய்கிறது- வைகோ குற்றச்சாட்டு
- தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக தான் உள்ளது.
- அரசுக்கு சிலர் களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே குண்டு வீச்சு போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
தமிழ் இதழியலின் முன்னோடியும், 'தமிழர் தந்தை' என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஆதித்தனார் திருவுருவ சிலைக்கும் மற்றும் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பத்திரிக்கை உலகின் ஈடு இணையற்ற புரட்சியாளர் ஆதித்தனார். அவரது சிலைக்கு மரியாதை செய்ததில் மகிழ்ச்சி. என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் ஆதித்தனார் தான்.
தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக தான் உள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசுக்கு சிலர் களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே குண்டு வீச்சு போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், ஆர்.எஸ்.எஸ். பேரணி மூலம் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலலூன்ற முயற்சி செய்கின்றனர் என்றும், ஒரு போதும் அதனை அனுமதிக்க கூடாது.
அதுமட்டுமின்றி பெரியார் சிலை, அண்ணா சிலை உள்ளிட்டவை மீது வேண்டுமென்றே இதுபோன்ற தாக்குதலை நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு வைகோ கூறினார்.