தமிழ்நாடு

விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-02 06:26 GMT   |   Update On 2022-10-02 06:26 GMT
  • கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

ஒகேனக்கல்:

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடிநீர் வந்தது.

இந்த நிலையில் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீடித்து தண்ணீர் வந்தது.

இதனால் ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்தனர்.

மெயின் அருவி குளிக்கும் இடம் சேதமானதால் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் மீன்சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீன் வியாபாரம் விற்பனை களைகட்டியது. காவிரி ஆற்றின் ஓரங்களில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் மக்கள் குவிந்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

Similar News