அன்னூர் அருகே சோபா, கட்டில் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
- ஆலையில் வழக்கம் போல் பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியது. இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அன்னூர்:
அன்னூர் அருகே குப்பையாபாளையம் பகுதியில் சோபா செட், கட்டில் போன்ற பர்னிச்சர்ஸ் பொருட்களை தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று உள்ளது.
இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது.
இதை பார்த்ததும் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வெளியில் ஓடி வந்தனர். மேலும் சம்பவம் குறித்து அன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் அன்னூர் தீயணைப்பு அலுவலர் பாலச்சந்திரன் மற்றும் தலைமையிலான 10 பேர் குழுவினர் விரைந்து சென்றனர். இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஹரி ராமகிருஷ்ணன் மற்றும் 10 பேர் கொண்ட குழுவும் வரவழைக்கப்பட்டது.
2 தீயணைப்பு துறையினரும் இணைந்து, பின்னர் தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.
இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியது. இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எப்படி தீ விபத்து நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.