சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும்- தமிழக அரசு உத்தரவு
- ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
- உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்படி கிராம சபை கூட்டங்கள், ஜனவரி 26, குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளது.
உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22-ந் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.