தமிழ்நாடு

மெமோரியல் ஹால் சிக்னலில் எஸ்கலேட்டர் வசதியுடன் நவீன சுரங்க நடைபாதை

Published On 2022-11-26 09:36 GMT   |   Update On 2022-11-26 09:36 GMT
  • சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் பகுதியில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.
  • நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சென்னை:

சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் பகுதியில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வந்தது.

மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த சாலையை பொதுமக்கள் எளிதில் கடந்து செல்வதற்காக பூமிக்கடியில் "எஸ்கலேட்டர்" வசதியுடன் நவீன சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் நடந்து வந்தது.

தற்போது இந்த நவீன சுரங்க நடைபாதை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளன.பொதுமக்கள் இந்த சுரங்க நடைபாதைக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் மற்றும் "எஸ்கலேட்டர்" வசதிகள், மின்விளக்கு, காற்றோட்ட வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் எளிதில் சாலையை கடந்து மறுபுறம் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லலாம்.

இதற்காக இந்த சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் அருகே இருபுறமும் 2 "எஸ்கலேட்டர்கள்" மற்றும் நவீன கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நவீன சுரங்க நடைபாதையால் பொதுமக்கள் நீண்டநேரம் இந்த சிக்னல் பகுதியில் காத்திருப்பது தவிர்க்கப்பட உள்ளது.

பொதுமக்கள் பயன் பாட்டுக்கு இந்த நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Similar News