தமிழ்நாடு

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர வேண்டும்- சீமான் பேட்டி

Published On 2022-06-26 11:34 GMT   |   Update On 2022-06-26 11:34 GMT
  • மக்கள் விரும்பும் அரசே நல்லரசு என சேகுவாரா கூறி உள்ளார்.
  • ஆட்சியாளர்கள் செயல்படுவதை விட விளம்பரம் கொடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர்.

குள்ளனம்பட்டி:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சூரிய ஒளியல் இருந்து மின்சாரம் எடுப்பது மக்களுக்கு தேவையான திட்டம்தான். ஆனால் அவர்களை பாதிக்கும் வண்ணம் இருக்க கூடாது. விளை நிலங்களை கைப்பற்றுவதை விட்டு விட்டு பயன்படாத நிலங்களில் இதனை செயல்படுத்த வேண்டும். மேலும் கேரள மாநிலத்தை போல அனைத்து வீட்டிலும் சோலார் மின்சார தகடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு விற்று விட்டு டாஸ்மாக்கை அரசு எடுத்து நடத்துகிறது. மக்களின் போராட்டத்துக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. அவர்களாகவே சோர்ந்து தளர்ந்து போராட்டத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மக்கள் விரும்பும் அரசே நல்லரசு என சேகுவாரா கூறி உள்ளார். தற்போது நடைபெறும் அரசு விளம்பரம் மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்தான் தங்கள் செயல்களை கூறுகின்றது. 8 சதவீதம் கூட அரசு செயல்பட வில்லை.

காமராஜர் முதல்வராக இருந்தபோது அரசின் திட்டங்களை சாதனை விளம்பரம் கொடுக்க அரசு அதிகாரிகள் கூறினர். அப்போது அவர் நாம் அமைத்த சாலைகளில் மக்கள் நடந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். அணைக்கட்டு மக்களுக்கு பயன்படுகிறது. இதுவே போதுமானது. விளம்பரம் மூலம் அதனை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் செயல்படுவதை விட விளம்பரம் கொடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு வருகிறது. நமது நாட்டில் மட்டும்தான் அரசு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் தரமற்று உள்ளன. அங்கு அதிகாரிகள் சிகிச்சை பெறுவதில்லை. ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை பெற்றுத்தருவதுதான் உண்மையான நன்றியாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். தற்போது அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அங்கீகாரம் இல்லை. எனவே அரசு இதனை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News