தமிழ்நாடு

என்னை சந்திக்க வராதீர்கள்- சசிகலா திடீர் உத்தரவு

Published On 2022-08-16 05:14 GMT   |   Update On 2022-08-16 05:14 GMT
  • விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன்.
  • நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன்.

உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால், தற்சமயம் எனது பிறந்த நாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே, எனக்கு நீங்கள் அளிக்கின்ற, சிறந்த பிறந்த நாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே, மறைந்த நம் புரட்சித்தலைவி அம்மாவுக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன்.

என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்துகொண்டு இருக்கிறது. அதாவது " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று புரட்சித்தலைவர் பாடியது போன்று, இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News