தமிழ்நாடு

10 ரூபாய் நாணயத்தின் நிலையை தெரிவிக்க ஈரோடு தேர்தலில் போட்டியிட தயாராகும் ஓய்வு பெற்ற அரசு பேருந்து டிரைவர்

Published On 2023-02-04 05:02 GMT   |   Update On 2023-02-04 09:38 GMT
  • தேர்தல் மன்னன் பத்மராஜன் போல், இவரும் விழிப்புணர்வுக்காக பல்வேறு தேர்தல்களில் போட்டியிட மனு செய்து வருகிறார்.
  • 10 ரூபாய் நாணயம் செல்லும், அதனை புறக்கணிக்கக் கூடாது என ரிசா்வ் வங்கி தரப்பில் அவ்வப்போது அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது.

திருச்சி:

திருச்சி உறையூர் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் (வயது 61). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவா். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது ராஜேந்திரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அப்போது அவரது வேட்பு மனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

தேர்தல் மன்னன் பத்மராஜன் போல், இவரும் விழிப்புணர்வுக்காக பல்வேறு தேர்தல்களில் போட்டியிட மனு செய்து வருகிறார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த வாரம் மனு தாக்கல் செய்வதற்காக சென்றபோது அவரது மனு ஏற்கப்படவில்லை.

இதுகுறித்து அவா் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பேருந்து நடத்துநா்கள் வசூல் செய்து கொண்டு வரும் பேருந்து கட்டணத்தில் பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனா். பல இடங்களில் வங்கிகள் கூட நாணயங்களை பெற்றுக் கொள்வதில்லை. வியாபாரிகளும் பெரும்பாலான நேரங்களில் இந்த நாணயங்களை புறக்கணித்து வருகின்றனா்.

10 ரூபாய் நாணயம் செல்லும், அதனை புறக்கணிக்கக் கூடாது என ரிசா்வ் வங்கி தரப்பில் அவ்வப்போது அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது. ஆனால், யாரும் அதனை பின்பற்றுவதில்லை. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட விருப்ப மனுவுடன், டெபாசிட் தொகையாக 10 ரூபாய் நாணயங்களுடன் சென்றேன். ஆனால், எனது மனுவை ஏற்கவில்லை.

டெபாசிட் தொகைக்கு நாணயங்களை மட்டுமே வழங்க இருக்கிறேன். ஏனெனில், 10 ரூபாய் செல்லுமா? செல்லாதா? என இடைத்தோ்தல் களத்தின் மூலம் அனைவருக்கும் அறிவிக்க உள்ளேன். எனவே, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். அனைத்தும் சரியாக இருந்தும் எனது வேட்பு மனுவையும், டெபாசிட் தொகையையும் நிராகரித்தால் மக்கள் மன்றத்தில் அரசும், தோ்தல் ஆணையமும் பதில் அளிக்க வேண்டும்.

மேலும், தோ்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நல்ல மனிதா்கள் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மக்களிடம் பிரசாரம் செய்யப் போகிறேன். என்னை பொது வேட்பாளராக அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News