சென்னையில் இருந்து கேரளா சென்ற ரெயிலில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்
- கைதி ரெயிலில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்பத்தியது.
- கேரள போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தேடினர்.
கோவை:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அனீஸ்பாபு (வயது 41). இவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த திருட்டு வழக்கில் இவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் பாலக்காடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அனீஸ்பாபு மீது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திருட்டு வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கேரள போலீசார் பாலக்காடு சப்-ஜெயிலில் இருந்து நேற்று காலை அழைத்து சென்றனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் ஜெயிலில் அடைப்பதற்காக அனீஸ்பாபுவை திருப்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவருடன் பாதுகாப்புக்கு 3 போலீசார் இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மங்களூர் நோக்கி சென்ற வெஸ்ட் கோஸ்ட் ரெயிலில் ஏறினர்.
ரெயில் நேற்று இரவு 10.30 மணியளவில் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அனீஸ்பாபு போலீசாரை ஏமாற்றி விட்டு ரெயிலில் இருந்து இறங்கி ஓடினார். இதனை பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். ரெயில் சென்று கொண்டு இருந்ததால் அவர்களால் ரெயிலில் இருந்து இறங்க முடியவில்லை. அதற்குள் அனீஸ் பாபு தப்பி ஓடி விட்டார்.
கேரள போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. கைதி ரெயிலில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்பத்தியது.