தமிழ்நாடு

திருச்சி, புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீஸ் தடை

Published On 2022-09-29 05:33 GMT   |   Update On 2022-09-29 05:33 GMT
  • பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
  • சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

திருச்சி:

டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை திடீர் ஆய்வு மேற்கொண்டது.

பின்னர் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி அந்த அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த சோதனை மற்றும் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்துள்ளன.

மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இந்த நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் திருச்சி மரக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து சுதந்திர தின அமுதப் பெருவிழா, காந்தி ஜெயந்தி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸ். சார்பில் வருகிற 2-ந்தேதி நடைபெற இருந்த ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சேதுராமன் அனுமதி கோரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் அளித்திருந்தார்.

தற்போது மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News