தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கு 19-ந்தேதிக்கு முன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

Published On 2022-08-10 07:41 GMT   |   Update On 2022-08-10 10:09 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
  • தலைமை நீதிபதி என்.வி ரமணா, இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

சென்னை:

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து வன்முறை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார், மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அ.தி.மு.க தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தும் கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யதார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி ரமணா, இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

Tags:    

Similar News