தமிழ்நாடு

வணிகர் நல வாரியத்தை உயிர்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மயிலை வியாபாரிகள் பாராட்டு

Published On 2022-06-27 09:36 GMT   |   Update On 2022-06-27 09:36 GMT
  • மயிலை வியாபாரிகள் சங்க 54-வது ஆண்டு விழா சங்க தலைவர் மயிலை பி.சந்திரசேகர் தலைமையில் நடந்தது.
  • தமிழக அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர ஆவண செய்ய வேண்டும்.

சென்னை:

மயிலை வியாபாரிகள் சங்க 54-வது ஆண்டு விழா சங்க தலைவர் மயிலை பி.சந்திரசேகர் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வணிகர் நல வாரியத்தை புதுப்பித்து அனைத்து வணிகர்களும் பங்கேற்கும் வகையில் உறுப்பினர் பதிவை இலவசமாக்கி உறுப்பினர்களாக ஆக்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை மயிலை வியாபாரிகள் சங்கம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது.

தமிழக அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர ஆவண செய்ய வேண்டும். அதை தமிழக அரசு மட்டும்தான் நடத்த வேண்டும்.

கார்ப்பரேசன் லைசென்சு, தொழில் வரி, பார்மசி லைசென்ஸ், உணவு பாதுகாப்பு, குப்பை வரி உள்பட அனைத்து உரிமங்களையும் ஒரே உரிமமாக ஏற்கனவே மறைந்த மத்திய மந்திரி மாறன் உறுதி அளித்ததின் பேரில் அதை அமல்படுத்த வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் (தொழில் அதிபர்கள்) தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுப்பதை கட்டாயப் படுத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் கொண்டு வந்த "மஞ்சள் பை" திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு அமல்படுத்துவதாக இருந்தாலும் எங்கள் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது, சாலையில் பிளாஸ்டிக் பையுடன் நடந்து செல்லும் பொது மக்கள் மீது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிகர்கள் நலிந்து இருப்பதால் ரேஷன் விநியோகத்தை முன்பு இருந்தது போல எங்கள் சிறு வணிகர்களிடம் ஒப்படைத்தால் எங்கள் பொருளாதாரம் சீரடையும்.

பிளாட்பார வியாபாரிகளுக்கு சென்னை மாநகராட்சி இடங்களில் இடம் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News