தமிழ்நாடு

அனுபிரியா- வேல்முருகன்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று எரித்த இளம்பெண்: 2 பேர் அதிரடியாக கைது

Published On 2023-11-06 05:29 GMT   |   Update On 2023-11-06 05:29 GMT
  • சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர்தான் வழக்கில் துப்பு துலங்கியது.
  • அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு என்ற முந்திரிக்காடு உள்ளது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இதுபற்றி உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது எரிந்து கொண்டிருந்த உடலின் மீது அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் சாக்கு, தார்ப்பாய் போன்றவற்றை போட்டு தீயை அணைத்தனர்.

இருப்பினும் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையான நிலையில் காட்சியளித்தது. இதனால் எரிக்கப்பட்டது ஆணா?, பெண்ணா? என்பது உடனடியாக தெரியாத நிலை இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அங்கு போலீஸ் மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது.

முந்திரி தோப்பில் இருந்து மோப்பம் பிடித்த படி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நாய், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் எரிக்கப்பட்டவர் உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எரிக்கப்பட்டவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீண்டும் முந்திரி காட்டிற்கே கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

அப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள தத்தனூர் குடிகாட்டில் இருந்து வடகடல் செல்லும் பாதையில் மெயின்ரோட்டில் ரத்தம் சிதறி கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்டவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுரேசை அவரது மனைவியே கொன்று எரித்த அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.

ஜெயங்கொண்டம் அருகே வடகடல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுப்பிரியா.

இவரது சித்தப்பா மகன் ஆலவாயை சேர்ந்த வேல்முருகன். அனுப்பிரியாவுக்கு வேல்முருகன் அண்ணன் முறை ஆகும்.

இந்த நிலையில் சகோதர, சகோதரி உறவு முறையை கடந்து அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுரேஷ் வியாபாரத்துக்காக சென்னை சென்ற வேளையில் வேல்முருகனும், அனுப்பிரியாவும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விவரம் சுரேஷுக்கு தெரியவந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இதனால் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுரேசை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

இதை தொடர்ந்து சம்பவத்தன்று அனுப்பிரியா சென்னையில் இருந்து சுரேஷை வரவழைத்தார். அதிகாலையில் மோட்டார்சைக்கிளில் அனுப்பிரியாவும், சுரேசும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்றனர்.

வடகடல் பிரிவு சாலையில் வந்தபோது அங்கு வேல்முருகன் வழிமறித்தார். அப்போது அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டில் சாக்கில் மூட்டை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து வேல்முருகன், அனுப்பிரியாவை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News