பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி
- விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
- தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நீரிழிவு நோய் காரணமாக கால் விரல்கள் அகற்றப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஜயகாந்த் தீவிர சிகிச்சையில் இருந்தார்.
இதனால், விஜயகாந்த் குணமடையக் கூறி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொலைபேசி வாயிலாகவும், டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், வி.கே. சசிகலா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கும் எனது நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.