தமிழ்நாடு செய்திகள்

இன்று முதல் தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2022-12-24 10:52 IST   |   Update On 2022-12-24 10:52:00 IST
  • தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
  • சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இச்சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் குறிப்பிட்டு உள்ளது.

அதன்படி தமிழகத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கும் பயணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நோய் அறிகுறியுடன் வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்று 2 சதவீத வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழகம் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News