தமிழ்நாடு

ரூ.171.24 கோடி செலவில் 5 புதிய தொழிற்பேட்டைகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2022-06-27 10:21 GMT   |   Update On 2022-06-27 10:21 GMT
  • புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதி.
  • 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டது.

புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதிகளை உள்ளடக்கிய அடுக்கு மாடி தொழில் வளாகங்கள் உருவாக்குதல், தொழில்முனைவோர் குழுமங்களுக்கு பொது வசதி மையங்கள் ஏற்படுத்துதல், தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.07 கோடி திட்ட மதிப்பீட்டில் 2000 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 192 தொழில் மனைகளுடன் பகுதிII-ல் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியகோளப்பாடி கிராமத்தில் 57.181 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 1800 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 171 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை.

சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பெரிய சீரகப்பாடி கிராமத்தில் 56.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.22.22 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,000 நபர்கள் நேரடியாகவும், 2,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில், 79 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், ராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 107 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.41 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 105 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் 0.56 ஏக்கரில், 5700 சதுர அடி கட்டிட பரப்பில் வங்கி, உணவகம், மருந்தகம், நிர்வாக அலுவலகம் மற்றும் கூட்டரங்கம் போன்ற வசதிகளுடன் தொழில்முனை வோர்களின் பயன் பாட்டிற்காக ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டிடம் என மொத்தம் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 7200 நபர்கள் நேரடியாகவும், 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ.அன்பரசன், கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News