தமிழ்நாடு

சென்னையை பசுமையாக்கும் முதல்வரின் திட்டம்- 315 பூங்காக்கள், 91 விளையாட்டு மைதானங்கள் விரைவில் திறப்பு

Published On 2022-09-30 04:19 GMT   |   Update On 2022-09-30 04:19 GMT
  • சென்னை நகரின் மொத்த பரப்பளவு 426 சதுர கி.மீட்டராகும். இதில் 64 சதுர கி.மீ. பரப்பளவு பசுமையாக்கப்பட்டுள்ளது.
  • தேசிய பசுமை கொள்கையின் அடிப்படையில் 33 சதவீதம் நகரம் பசுமை நிறைவுடன் காணப்பட வேண்டும்.

சென்னை:

சென்னை மாநகரை பசுமை நகரமாக உருமாற்றம் செய்ய வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் நகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதியில் செடிகள் உருவாக்கப்படுகின்றன. பாலத்தின் தூண் பகுதி முழுவதும் செடிகள் படர விடப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு பசுமையாக அழகாக உள்ளது.

பாலங்களின் கீழ் பகுதியில் உள்ள காலி இடங்களில் அழகிய செடிகள், மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர பூங்காக்கள் மேம்படுத்தப்படுகின்றன. 315 பூங்காக்கள், 91 இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து துணை மேயர் மகேஷ்குமார் கூறியதாவது:-

சென்னை மாநகரை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் முக்கிய நோக்கமாகும். நகரம் முழுவதும் பூங்காக்கள், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானத்தை சுற்றி மரங்கள் அமைத்து பசுமையான சூழலை உருவாக்க வேண்டுமென்பதே முதல்வரின் விருப்பமாகும்.

பூங்காக்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாடும் பகுதி, இருக்கைகள் அமைத்தல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடுவில் ஸ்டேஜ் போன்றவையுடன் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை நகரின் மொத்த பரப்பளவு 426 சதுர கி.மீட்டராகும். இதில் 64 சதுர கி.மீ. பரப்பளவு பசுமையாக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை கொள்கையின் அடிப்படையில் 33 சதவீதம் நகரம் பசுமை நிறைவுடன் காணப்பட வேண்டும். சென்னையில் இதுவரை 15 சதவீதம் மட்டுமே பசுமை நிறைந்த பகுதிகளாக உள்ளன.

Tags:    

Similar News