தமிழ்நாடு

கொங்கு மண்டலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணம்

Published On 2022-08-19 05:33 GMT   |   Update On 2022-08-19 05:33 GMT
  • கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் 25-ந் தேதி திருப்பூர் செல்கிறார்.
  • அன்று காலை திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

கோவை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 4 நாட்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

கொங்கு மண்டல சுற்றுப்பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்குகிறார். இதற்காக வருகிற 23-ந் தேதி மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

கோவைக்கு வரும் முதல்-அமைச்சரை தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்கின்றனர். அவர்களின் வரவேற்பை ஏற்று கொள்ளும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மறுநாள் காலை 10 மணிக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார். தொடர்ந்து முடிவுற்ற 226 திட்ட பணிகளையும் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் 261 புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

அரசு விழா முடிந்ததும் நேராக பொள்ளாச்சி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மாலையில் தி.மு.க. கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது ஏராளமான மாற்றுக்கட்சியினர் முதல்-அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் 25-ந் தேதி திருப்பூர் செல்கிறார். அன்று காலை திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

அப்போது தமிழ்நாடு கயிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் குண்டடம், கரூர் பகுதிகளில் அமைய உள்ள கயிறு தொழில் குழுமங்களுக்கான அரசாணை, தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு உதவிகள், கயிறு சார்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

நிகழ்ச்சிகள் முடிந்ததும், முதல்-அமைச்சர் அன்று மாலை திருப்பூரில் இருந்து கார் மூலம் ஈரோட்டிற்கு செல்கிறார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். மேலும் அதன் அருகே அமைக்கப்பட்ட படிப்பகத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் ஈரோடு செல்லும் அவர் அன்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 26-ந் தேதி காலை ஈரோட்டில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

ஈரோட்டில் நிகழ்ச்சிகள் முடிந்ததும், அங்கிருந்து அவர் கார் மூலம் கோவைக்கு வருகிறார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். பின்னர் அவர் தனது 4 நாள் பயணத்தை முடித்து கொண்டு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

கொங்கு மண்டலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகிறார்கள். அவர் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்காக ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் உள்ள தி.மு.க.வினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News