நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது- டிரைவர் உயிர் தப்பினார்
- அஜாக்ஸ் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:
பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர்களை காரில் அழைத்து சென்று விடுவது வழக்கம். இன்று அதிகாலை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள ஊழியர்களை இறக்கி விட்டு டிரைவர் ராம்கி எண்ணூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ராம்கி காரை நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. காரில் தீப்பிடித்ததும் டிரைவர் ராம்கி கிழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.