தமிழ்நாடு

ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா மீண்டும் தீவிரம்

Published On 2022-08-09 09:41 GMT   |   Update On 2022-08-09 09:41 GMT
  • தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே பரபரப்பாக பேசப்படும் நபராக இருந்து வருகிறார்.
  • அரசியல் சூழல், தமிழகத்தின் எதிர்கால அரசியல் ஆகியவை பற்றி இருவரும் விவாதித்துள்ளனர்.

சென்னை:

தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே பரபரப்பாக பேசப்படும் நபராக இருந்து வருகிறார்.

1995-ம் ஆண்டு "பாட்சா" படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு மீது கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்வலையை ஏற்படுத்தின.

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது என்றும், மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் அந்த ஆண்டவனாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசிய ஆவேச பேச்சு இப்போதும் பேசப்படும் விஷயமாகவே உள்ளது.

இதன் பின்னர் ரஜினியின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவரது அரசியல் ஆசை எதிரொலித்துக் கொண்டே வந்தது.

இந்த நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ரஜினிகாந்த் "நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி" என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

புது கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் அவர் ஈடுபடப் போவதாக வெளியான தகவலை தொடர்ந்து தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ரஜினி பின்வாங்கி விட்டார்.

கொரோனா பரவலை காரணம் காட்டியும், தனது உடல்நிலையை குறிப்பிட்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்து விட்டு ரஜினி ஒதுங்கிக் கொண்டார்.

ரஜினிகாந்த்தை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வந்து விட வேண்டும் என்பதில் பல ஆண்டுகளாகவே தீவிரமாக செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா கட்சி அவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆனால் அதற்கு ரஜினி பிடி கொடுக்கவில்லை.

ஆனால் இருப்பினும் ரஜினி அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக வெளியிட்ட அறிவிப்பை பாரதிய ஜனதா வரவேற்றது. ரஜினியின் ஆன்மீக அரசியல் தங்களுக்கும் தமிழகத்தில் சாதகமான நிலையையே ஏற்படுத்தும் என்றும் அக்கட்சியினர் கருதினர்.

ஆனால் ரஜினி கடைசி நேரத்தில் அரசியல் பிரவேசத்தில் இருந்து பின்வாங்கியதால் ரசிகர்களோடு சேர்ந்து பா.ஜனதா கட்சியும் ஏமாற்றத்தையே சந்தித்தது.

அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த போதிலும் ரஜினியுடன் பாரதிய ஜனதா கட்சி முன்னணி நிர்வாகிகள் அவருடன் நெருக்கம் காட்டியே வந்தனர். குறிப்பாக டெல்லி மேலிட தலைவர்கள் ரஜினி மீது இப்போதும் தனி பாசத்துடனேயே உள்ளனர். அந்த வகையில் டெல்லியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான கூட்டத்தில் ரஜினியும் பங்கேற்றார்.

அப்போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூட்டோடு சென்னை திரும்பிய நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் வரையில் இருவரும் பேசியுள்ளனர்.

அப்போது தற்போதைய அரசியல் சூழல், தமிழகத்தின் எதிர்கால அரசியல் ஆகியவை பற்றி இருவரும் விவாதித்துள்ளனர்.

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் அப்படி பேசியது என்ன? என்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பற்றியும் விவாதித்தோம். ஆனால் அது என்ன? என்பதையும் கூற முடியாது எனவும் ரஜினி தெரிவித்து உள்ளார்.

இப்படி கவர்னருடன் பேசிய விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றியதை வெளிப்படையாக சொல்லாமல் ரஜினிகாந்த் ரகசியம் காப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏதாவது அரசியல் திட்டத்தை அவர் மனதில் வைத்திருக்கிறாரோ? என்கிற யூகமும் ஏற்படுகிறது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் எதிர்கொள்ள ஆயத்தமாகும் பா.ஜனதா கட்சி, தமிழகத்தில் தங்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்தும் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்து விட்ட நிலையிலும் பாராளுமன்ற தேர்தலுக்குள் எப்படியாவது அவரது ஆதரவை பெற்று விட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாகவே களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த முயற்சி பலன் அளிக்குமா? ரஜினி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக "வாய்ஸ்" கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News