தமிழ்நாடு

அதிமுகவை கைப்பற்ற வியூகம்- ஓ.பன்னீர்செல்வம் 28-ந்தேதி தலைமை கழகம் வருகிறார்

Published On 2022-06-26 05:58 GMT   |   Update On 2022-06-26 05:58 GMT
  • நாகை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது.
  • ஓ.பன்னீர்செல்வத்தின் ரகசிய திட்டங்களை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி அணியினரும் தயாராகி வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பகிரங்கமாக வெடித்தது.

அமைதியாக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க.வில் இந்த ஒற்றை தலைமை விவகாரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இடையே மேலும் பிரிவினையை உருவாக்கியது.

இரட்டை தலைமை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்திய நிலையில் ஒற்றை தலைமையை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பிடிவாதமாக இருந்தனர்.

இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமி பக்கமும் இன்னொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் இருந்து காய் நகர்த்தி வந்தனர்.

பிரச்சினை பூதாகரமாக சென்றதால் கட்சியின் மூத்த நிர்வாகிகளான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தம்பித்துரை உள்ளிட்டோர் இரு தரப்பிலும் மாறி மாறி சமரசம் பேசி பார்த்தனர். இதில் எந்த உடன்பாடும் ஏற்பட வழியில்லாமல் போனது.

பொதுக்குழுவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் பிரச்சினை கோர்ட்டுக்கு சென்று விட்டது.

அன்றைய தினம் ஐகோர்ட்டில் விடிய விடிய நடைபெற்ற மேல்முறையீடு வழக்கில் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில்தான் கடந்த 23-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வானகரத்தில் கூடியது. கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்.

அவர் மட்டுமின்றி துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமியும் மீண்டும் அதே அறிவிப்பை மறுபடியும் சொன்னார்.

பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு மட்டுமே நடைபெற்றது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதனால் பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை. கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் ஆவேசப்பட்டார்.

பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வருகிறது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் கட்சியின் அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ரத்தாகி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், "திட்டமிட்டபடி ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை தீர்மானம் பொதுக்குழுவில் நிறை வேற்றப்படும்" என்று கூறி உள்ளார்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறுகையில், "பொதுக்குழுவே நடக்காது" என்று கூறினார்.

பொதுக்குழு தொடர்பாக இரு தரப்பினரும் சொற்போர் செய்து வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் அகற்றப்பட்டும், பேனர்களில் ஓ.பி.எஸ். படங்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன. நாகை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது.

அமைதியாக சென்ற அ.தி.மு.க. இப்போது இரு பிரிவாகி விட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு கே.பி.முனுசாமியும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வைத்திலிங்கமும் தூபம் போட்டு கட்சியை பிளவு படுத்தி விட்டதாக தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக அமர்ந்து பேசி இருந்தால், ஓ.பன்னீர்செல்வம் சமரசம் ஆகி விட்டு கொடுத்திருப்பார் என்றும் அதற்கு வழி இல்லாமல் உடன் இருப்பவர்கள் சமரசத்தை கெடுத்து விட்டனர் என்றும் குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் 2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வழியாக பெரியகுளம் சென்றுள்ளார்.

மீண்டும் சென்னைக்கு நாளை ஓ.பி.எஸ். வருகிறார். நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அன்று அமாவசை தினம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் அவரது அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ரகசிய திட்டங்களை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி அணியினரும் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே அ.தி.மு.க.வின் பொதுக்குழு மறுபடியும் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடைபெறுமா? அல்லது அதற்கும் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கி விடுவார்களோ? என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.

ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்ற பிரச்சினையில் இருவரும் கோர்ட்டுக்கு செல்லாமல் சுமூகமாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பது போக போக தெரிய வரும்.

Tags:    

Similar News