உடுமலை அமராவதி அணையில் இருந்து 13,000 கனஅடி நீர் வெளியேற்றம்- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து 14ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
- அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் முதல் கரூா் வரையில் 2 மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த அணை நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலம் மறையூா், காந்தலூா் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருதால் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் அமராவதி ஆற்றின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த 4-ந்தேதி முதல் அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து 14ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதையடுத்து இன்று அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 13ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால்அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.
90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் இன்று காலை நிலவரப்படி 87 அடியாக உள்ளது. இதுதவிர அமராவதி ஆற்றின் உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினா் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.மேலும் அணைப் பகுதியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.