தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம்

கடவுளே எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரணும்... எடப்பாடி-ஓ.பி.எஸ் அணிகள் போட்டி போட்டு யாகம்

Published On 2022-08-13 08:52 GMT   |   Update On 2022-08-13 10:37 GMT
  • பொதுவாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இறை பக்தி அதிகம் உண்டு.
  • நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு யாகம் வளர்த்தார்கள்.

அ.தி.மு.க.வை வலிமைமிக்க இயக்கமாக மாற்றிய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பூஜைகள், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவர். தேர்தல் வெற்றிக்காகவும், எதிரிகளை ஒடுக்கவும் அவர் பூஜைகள், யாகங்கள் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அவரது வழித்தோன்றல்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள்.

பொதுவாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இறை பக்தி அதிகம் உண்டு. அதிலும் குல தெய்வ வழிபாட்டில் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. தற்போது அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் நடத்தி கொண்டிருக்கும் யுத்தம் பூஜை, யாகங்கள் வரை போய்விட்டது. சமீபத்தில் இருவருமே சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.

இதைப்பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு யாகம் வளர்த்து பூஜைகள் போட ஆரம்பித்து விட்டனர்.

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்த விசாரணையில் இரு தரப்பு வக்கீல்கள் வாதம் முடிந்து தீர்ப்பு தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அந்த தீர்ப்பு எப்படி வருமோ என்று இரு தரப்பு அணித் தலைவர்களும் தவியாய் தவித்தபடி உள்ளனர்.

கோர்ட்டு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்று கடந்த 2 நாட்களாக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களும் யாகம் வளர்த்து பூஜைகள் செய்வதை தொடங்கி உள்ளனர். நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு யாகம் வளர்த்தார்கள். எந்த அணி நடத்திய யாகத்துக்கு அதிக சக்தி உள்ளது என்பது கோர்ட்டு வெளியிடப்போகும் தீர்ப்பு மூலம் தெரிந்துவிடும்.

Tags:    

Similar News